March 19, 2020
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
சேலத்தில் உள்ள பிரபல விநாயகர் மிஷன் குழுமத்தின் பாரா மெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 7 பேர் உதகைக்கு சுற்றுலா சென்றனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பழங்கரை என்ற இடத்தில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, எதிரே சிமெண்ட் ஏற்றி வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் கார் சின்னாபின்னமாகி, காருக்குள் இருந்த மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் காரில் பயணித்த ராஜேஷ் (21), சூர்யா (21) வெங்கட் (21), இளவரசன் (21) வசந்த் (21) ஆகிய 5 மாணவர்களும் கார் டிரைவரும் உயிரிழந்தனர்.
பலியான மாணவர்கள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் சந்தோஷ், கார்த்தி ஆகிய 2 மாணவர்களும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாரா மெடிக்கல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் இந்த மாணவர்கள், கொரானா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால், ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்ற போது இந்த சோக விபத்து நிகழ்ந்துள்ளது.