January 18, 2020 தண்டோரா குழு
திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என குள்ளநரி சக்திகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர், திமுகவை விமர்சித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் திமுக- காங்., கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது கே.எஸ்.அழகிரியுடன் கே.வி.தங்கபாலு, விஷ்ணுபிரசாத் எம்.பி., காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
காங்., தலைவர்கள் உடனான சந்திப்பிற்கு பிறகு ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கூட்டணி குறித்த கருத்துக்களை திமுக மற்றும் காங்., கட்சிகளை சேர்ந்தவர்கள் பொதுவெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கே.எஸ்.அழகிரியின் அறிக்கை, சில நாட்களாக இருதரப்பிலும் விரும்பத்தகாத கருத்து பரிமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. கூட்டணி குறித்து பொது வெளியில் விவாதிப்பதை நான் சிறிதும் விரும்பவில்லை. திமுக- காங்., கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என கே.எஸ்.அழகிரி என்னிடம் பேசி உள்ளார். திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என குள்ளநரி சக்திகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.