January 30, 2019 தண்டோரா குழு
தமிழக கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றும் தமிழக அரசில் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சாமி சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள 19 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. மேலும் அப்பகுதியில் உள்ள மண்டபத்தின் மேற்கூரைகள், தூண்கள் சேதம் அடைந்தன. இதனால் அங்கு கடை நடத்தி வருபவர்கள் கடைகளை அகற்ற வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையெடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதுதொடர்பான, மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் சன்னிதானத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை பிறபித்துள்ளது.
இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது, மனுவை விசாரணைக்கு ஏதுக்கொண்ட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.