February 14, 2018 தண்டோரா குழு
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாநில அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைபோல் தற்போது கேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்தி கொள்ள மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி குறைந்த பட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. எனினும் மாணவர்களுக்கான சலுகை கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. பஸ் கட்டணத்தை மாற்றாவிட்டால், ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக தனியார் பஸ் நிறுவனங்கள் கூறியதை தொடர்ந்து பஸ் கட்டணத்தை உயர்த்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி குறைந்த பட்ச கட்டணம் சாதாரண மற்றும் நகர பஸ்களில் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாகவும், பாஸ்ட் பாசஞ்சர் பஸ்களில் 10 ரூபாயிலிருந்து 11 ரூபாயாகவும், சூப்பர் எக்ஸ்பிரஸ் பஸ்களில் 13 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும், சூப்பர் டீலக்ஸ் செமி ஸ்லீப்பர் பஸ்களில் 20 ரூபாயிலிருந்து 22 ரூபாயாகவும், சொகுசு ஏசி பஸ்களில் 40 ரூபாயிலிருந்து 44 ரூபாயாகவும், வால்வோ பஸ்களில் 40 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.
மேலும், பேருந்து கட்டண உயர்வு மார்ச் 1 முதல் அமலுக்கு வருவதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.