September 19, 2026
தண்டோரா குழு
டாடா சன்ஸ் நிர்வாகத் தலைவராக என். சந்திரசேகரன் அவர்களை மேலும் 5 ஆண்டுகளுக்கு நியமனம் செய்வது குறித்து இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் டாடா குழுமத்தை சிறப்பாக வழிநடத்தி வரும் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் (சந்திரா) பணியைப்பாராட்டி கடந்த ஆண்டு ஜூலை 28-ந்தேதி டாடா அறக்கட்டளை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை இயக்குனர் குழு பெற்றுக்கொண்டது. அவரது சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையில்,அவரது தற்போதைய பதவிக்காலம் முடிந்தவுடன், அவரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நிர்வாகத் தலைவராக மீண்டும் நியமிக்க டாடா அறக்கட்டளை தீர்மானித்தது.
இதையடுத்து,கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்,சந்திராவை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நிர்வாகத் தலைவராக மீண்டும் நியமிக்க டாடா சன்ஸ் இயக்குனர் குழு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான முறையான ஒப்புதலைப் பெற இயக்குனர் குழு முடிவு செய்தது.ஆனால் பிப்ரவரி மாதம், அனைவரின் ஒருமனதான ஆதரவு கிடைக்காததால், இந்தத் தீர்மானம் மீதான முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டங்களிலும் இது குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இதைக் கருத்தில் கொண்டு, தனது தற்போதைய பதவிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் அப்பதவியில் தொடரப் போவதில்லை என கடந்த மாதம் 12-ந்தேதி சந்திரா முடிவு செய்தார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி, டாடா சன்ஸ் இயக்குனர் குழுவின் நியமன மற்றும் ஊதியக் குழு கூடி, அவரது இந்த முடிவு குறித்தும், அவரை மீண்டும் நிர்வாகத் தலைவராக நியமிப்பது குறித்தும் விவாதித்தது.
விரிவான ஆலோசனைக்குப் பிறகு, டாடா குழுமத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, தனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், அடுத்த இயக்குனர் குழு கூட்டத்தில் அவரை மீண்டும் நியமிக்கப் பரிந்துரைக்கவும் முடிவு செய்தது.அதன்படி 17-ந்தேதி நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில், தனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி குழு விடுத்த கோரிக்கையை சந்திரா ஏற்றுக்கொண்டார்.
அதன்பிறகு, அவரது தற்போதைய பதவிக்காலம் முடிந்தவுடன், அவரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நிர்வாகத் தலைவராக மீண்டும் நியமிக்கப் பெரும்பான்மை வாக்குகளுடன் இயக்குனர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவும், இது தொடர்பான விதிமுறைகளுக்கு ஆர்பிஐ,டாடா அறக்கட்டளை மற்றும் பிற பங்குதாரர்களின் வழிகாட்டுதலைப் பெறவும் இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது.