February 14, 2019
தண்டோரா குழு
ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் பரிதாபமாக உயரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் இருந்து ஸ்ரீநகருக்கு 54பி பட்டாலியனைச் சேர்ந்த 20 சி.ஆர்.பி.எப் வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனம் அவந்திப்போரா பகுதியில் உள்ள லாதூமோட் என்ற இடத்தின் அருகே சென்ற போது, தீவிரவாதிகள் அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். இதனால் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதன்பின்னர் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வாகனங்களும் சேதமடைந்துள்ளன. மேலும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வாகனத்தில் அதிகமான வீரர்கள் சென்றதால் உயிர்ப்பலி அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.