February 14, 2020 தண்டோரா குழு
சென்னையில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடியை கண்டித்து கோவை ஆத்துப்பாலத்தில் நள்ளிரவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு அன்மையில் கொண்டு வந்த குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர். போலீஸாரின் தடியடி நடவடிக்கை கண்டித்து சென்னையில் பல்வேறு பகுதியிகளில் போராட்டங்கள் நடைபெற துவங்கிய நிலையில்,கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நள்ளிரவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதனால் பாலக்காடு சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே மத்திய அரசை கண்டித்தும், தடியடி நடத்திய போலீஸாரை கண்டித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த மாநகர துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) பாலாஜி சரவணன், தெற்கு உதவி ஆணையர் செட்ரிக் மனுவேல் உள்ளிட்ட அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் அதிகளவு இஸ்லாமியர்கள் குவியத்துவங்கியதால் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து போலீஸார் ஆத்துப்பாலத்தில் குவிக்கப்பட்டனர். சென்னையில் காவல் துறையிருடன் இஸ்லாமிய அமைப்பினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.