February 6, 2019 தண்டோரா குழு
சென்னையில் குப்பை கிடங்கில் கடந்த 21ம் தேதி கை, கால் துண்டுதுண்டாக பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட கொலை சம்பவத்தில் தற்போது போலீசார் துப்பு துலக்கியுள்ளனர்
சென்னையை அடுத்த துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு கடந்த 21ம் தேதி கோடம்பாக்கம் பவர் அவுஸ் பகுதியில் இருந்து குப்பைகள் லாரியில் கொண்டு வந்து கொட்டப்பட்டது. அப்போது கொட்டப்பட்ட குப்பையில், கை மற்றும் 2 கால்கள் இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல அளித்துள்ளனர். இதையடுத்து, பள்ளிக்கரணை போலீஸார் விரைந்து சென்று நடத்திய சோதனையில் அது ஒரு பெண்ணின் கை மற்றும் கால்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. அதில், வலது கையில் டிராகன் படமும் வலது கை தோள் பட்டையில் சிவன், பார்வதி உருவமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. காலில் பெண்கள் அணியும் மெட்டி போட்டதற்கான அடையாளம் இருந்தது. எனினும் கொல்லப்பட்ட பெண் யார் என அடையாளம் தெரியாமல் இருந்தது.
இதற்கிடையில், 2 வாரமாக போலீசார் விசாரித்து வந்ததில் தற்போது துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என பள்ளிக்கரணை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.மேலும்,கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடலை அடையாறு ஆற்றில் கைப்பற்றியுள்ளனர். சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்துவந்த சந்தியா என்ற அந்த பெண் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது கணவர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். பாலகிருஷ்ணன் திரைப்பட துணை இயக்குனர் ஆவார். இவர் அண்மையில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டுள்ளார். மேலும் பாலகிருஷ்ணன் ”காதல் இலவசம்” என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அந்த படமானது 2015ல் வெளியானது. அதை தயாரித்தது கொலையான சந்தியா என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
பால கிருஷ்ணனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில்,
சந்தியா பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஐந்தும் முறை வீட்டை விட்டு வெளியேறியதாகவும் இதுகுறித்து பலமுறை பாலகிருஷ்ணன் எச்சரித்தும் சந்தியா கேட்க்காததால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் சந்தியாவை வெட்டி கொன்று உடல் பாகங்களை வீசி எறிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவர் அளித்த தகவலின் பேரில் ஜாபர்கான்பேட்டை பகுதியில் காசி திரையரங்கம் அருகே சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலையை போலீசார் கைப்பற்ற முயன்று வருகின்றனர்.