January 30, 2020 தண்டோரா குழு
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனா முழுவதும் சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு கொனாரோ வைரஸ் பரவாமல் தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் முதலாவதாக ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், வுஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரள மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அந்த மாணவர் மருத்துவமனையில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாவும், தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ம் தேதி முதல் சீனாவிற்கு சென்று திரும்பியவர்கள் தங்களது உடல்நிலையில் இருமல், காய்ச்சல், சுவாசக்கோளாறு போன்ற ஏதேனும் லேசான மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுகும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டதட்ட 16 நாடுகளுக்கு வேகமாக பரவியுள்ளது. இந்த நாடுகளில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.