January 31, 2019
சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இருந்து மேலும் ஒரு நீதிபதி விலகியுள்ளார்.
நாகேஸ்வர ராவ் வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி ரமணா விலகினார்.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு கூறிக் கொண்டதால், இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது.
சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதை அடுத்து இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில் சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது. சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, வழக்கறிஞர் பிரசாத் பூஷண் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார். அப்போது, சிபிஐ புதிய இயக்குனர் தேர்வு, நியமனம் ஆகியவற்றில் வெளிப்படை தன்மை வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பின்னர் அவருக்கு பதிலாக நீதிபதி ஏ.கே. சிக்ரி இந்த வழக்கை விசாரிப்பார் என கூறப்பட்டது. ஆனால் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து சிக்ரியும் கடந்த வாரம் விலகிவிட்டார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நீதிபதி என்.வி. ரமணாவும் வழக்கு விசாரணையிலிருந்து விலகிவிட்டார். இந்த வழக்கில் இதுவரை தலைமை நீதிபதி உள்பட 3 பேர் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.