January 14, 2019
தண்டோரா குழு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம் நடைபெறுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிந்துள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரள மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையில், 2 பெண்கள் சமீபத்தில் அதிகாலையில் சபரிமலை கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.இதையடுத்து, ஒரு மணி நேரம் நடை மூடப்பட்டு பரிகாரப் பூஜைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. சபரிமலையில் பெண்களை அனுமதித்தை கண்டித்து பெரும் போரட்டங்கள் நடைபெற்றன.இதனால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பின்பு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன,.
இந்நிலையில் சபரிமலையில் இன்று பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி தெரியும். இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். இதனையடுத்து ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. மேலும் இதற்காக பாதுகாப்பு பணிக்கு பம்பை மற்றும் சன்னிதானத்தில் 5 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அவர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியை செய்து வருகிறார்கள்.
இதனைதொடர்ந்து மகர ஜோதி தரிசனம் முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆயிரம் சிறப்பு பஸ்களும் தயார் படுத்தி வைத்துள்ளனர்.