January 18, 2019
தண்டோரா குழு
சபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் சபரிமையில் பெண்கள் நுழைவதற்காக போராட்டங்கள் நடைபெற்றன. சபரிமலையில் சாமி தரிசனத்துக்காக செல்லும் பெண்களை தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க கேரள போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்
இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் வரும் ஜனவரி மாதம் 22-ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்கள்18 படிகள் ஏறி அதிகாலை 3.45 மணியளவில் தரிசனம் செய்துள்ளனர். இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தததை அடுத்து நடை அடைக்கப்பட்டு மீண்டும் ஒரு மணிநேர பரிகார பூஜைக்கு பின்னர் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. சபரிமலைக்கு சென்றதால் உறவினர்கள் தாக்குதல் நடத்துவதாகவும், எனவே தங்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கனகதுர்கா, பிந்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள அரசுத் தரப்பில் சபரிமலையில் 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் ஐயப்பனை வழிபட பாதுகாப்பு தரப்படும் என்றும் கேரள அரசு உறுதியளித்தது.இதுவரை வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசு 529 வழக்குகள் போடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பு குறித்த சீராய்வு மனுக்களை விசாரிக்கக் கோரும் மனு மற்றும் கோயிலை தூய்மைப்படுத்தக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.