January 14, 2019
தண்டோரா குழு
ஆண்டுதோறும் விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு பயிர்களில் அதிக மகசூல் தரக்கூடிய புதிய இரகங்களை விவசாயப் பெருமக்களுக்கு பொங்கல் பரிசாக வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 14 புதிய பயிர் இரகங்களை வெளியிட்டு உள்ளனர்.
தரமான விதையே உயர் விளைச்சலுக்கு ஆதாரம் என்பதால், ஆண்டுதோறும் விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு பயிர்களில் அதிக மகசூல் தரக்கூடிய புதிய இரகங்களை விவசாயப் பெருமக்களுக்கு பொங்கல் பரிசாக வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட பல்வேறு இரகங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடையே பிரபலமாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல, நடப்பு ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தினால் விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட 14 புதிய பயிர் இரகங்களை இந்த பொங்கலுக்கு வெளியிட்டு உள்ளனர். அதன்படி நெற்பயிரில் ஏடிடீ 53, விஜிடி 1, சாமை ஏடிஎல் 1, பாசிப்பயறு விபிஎன் 4, நிலக்கடலை பிஎஸ்ஆர் 2, ஆமணக்கு ஒய்.டி.பி.1, மரப்பயிரில் கடம்பு எம் டி பி 1, சுரைக்காய் பி எல் ஆர் 2, பூண்டு ஊட்டி-2, நட்சத்திர மல்லிகை கோ 1, உருளைக்கிழங்கு குப்ரி சஹ்யாத்ரி, வாழையில் காவிரி கல்கி, காவிரி சபா, காவிரி சுகந்தம் ஆகிய இரகங்கள் பொங்கல் பரிசாக விவசாயிகளின் நன்மைக்காக வெளியிடப்பட்டது.
இந்த நெல் வகைகள் ஒவ்வொன்றும் பல்வேறு பலன்களை அளிப்பதாகவும் இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்து நல்ல லாபம் கிடக்கும் வகையில் ஒவ்வொரு ரகங்களும் இருக்கும் என பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.