February 20, 2020
கோவை ஆத்துப்பாலம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டக்களத்தில் புதுமண தம்பதியினர் திருமணம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இன்று இரண்டாவது நாளாக 200 க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே போராட்டக்களத்தில் அப்துல்கலாம் – ரேஷ்மா ஷெரின் ஆகியோர் திருமணம் நடைபெற்றது. குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான அப்துல்கலாமிற்கும், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ரேஷ்மா ஷெரினுக்கும் இன்று திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதனை மாற்றி போராட்டக்களத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. மேலும் புதுமண தம்பதியினர் சிஏஏவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மக்களின் போராட்ட களத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இங்கு திருமணம் செய்ததாகவும், சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென புதுமண தம்பதியினர் வலியுறுத்தினர்.