December 13, 2020
தண்டோரா குழு
கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பு நிறுவன தினம் முதல் தற்போது வரை சம்பாதித்த பணத்தை மக்களுக்கே ரூபாய் 500வீதம் திருப்பி கொடுக்கப்பட்டதால் திருச்சி சாலையில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) உடல்நலக் குறைவால் கடந்தவெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 இல் தொடங்கி, வாகனங்களுக்கான கியர் உள்ளிட்ட இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தார். தொடர்ந்து கடந்த 1996 ஆம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பை சுப்பிரமணியம் தொடங்கினார்.இந்த அமைப்பின் அறங்காவலராக சுப்பிரமணியம் இருந்து வந்தார்.
சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது.இதையடுத்து சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.உணவகம், மருத்துவமனை,மருந்தகம், பெட்ரோல் பங்க் போன்றவற்றை லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார். மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு தினசரி இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய், மருந்தகங்களில் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை, குறைந்த விலையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்படுவதால் தினசரி நூற்றுக்கணக்கானோர் சாந்தி கியர் மருத்துவ சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வளவு சமூக சேவைகளை செய்தாலும், ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம்.இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி காலமானார்.இவரது நினைவாக கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் இடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் ஏழை மக்களுக்கு இன்று ரூபாய் 500 வழங்கப்பட்டது.
சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவன தினம் முதல் தற்போது வரை சம்பாதித்த பணத்தை மக்களுக்கே திருப்பி செலுத்த இந்த பணம் கொடுக்கபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவை திருச்சி சாலையில் மக்களின் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.