February 1, 2019
தண்டோரா குழு
மேம்பால பணிகளுக்காக வீடுகளை காலி செய்து இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை பாலக்காடு சாலையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 1.7 கிலோமீட்டர் நீளத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த பழ மார்க்கெட் ஏற்கனவே இடித்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அருகாமையில் உள்ள சி.எம்.சி காலனி பகுதியில் உள்ள வீடுகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிக்காக இன்று மாநகராட்சி அதிகாரிகள் சி.எம்.சி காலனி பகுதிக்கு சென்றனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கணக்கெடுப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி துப்புறவு பணியாளர்களும் அருந்ததியினர் மக்களும் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில் இருந்து பொதுமக்களை வேறு இடத்திற்கு இடம்பெயர வைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் என தெரிவித்துள்ள அப்பகுதியினர் தங்களுக்கு மீன் மார்க்கெட் பகுதியை காலிசெய்து அங்கு வீடுகள் கட்டி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஆட்சியாளர்களிடமும், அதிகாரிகளிடமும் பல முறை முறையிட்டும் அதனை செவிமடுக்காமல் தற்போது கணக்கெடுப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.