August 31, 2026
தண்டோரா குழு
எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில், எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் ‘Transforming India’ மாநாட்டின் 5-வது பதிப்பு கோவையில் தொடங்கியது.
‘Adapt to the Future’ (எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்) என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மூன்று நாள் மாநாடு, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை கோவை எஸ்எஸ்விஎம் வேர்ல்ட் ஸ்கூல் வளாகத்தில் நடைபெறுகிறது.
மாணவர்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமே தயார்படுத்தாமல், எதிர்கால வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர்களின் மன உறுதி, உடல் வலிமை, உணர்ச்சி நல்வாழ்வு, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் வகையில் மாநாட்டில் பல்வேறு உரையாடல்கள் மற்றும் அனுபவ நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் இந்திய விண்வெளி வீரர் ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், பரதநாட்டியக் கலைஞர் ருக்மணி விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் பங்கேற்று, மாணவர்களுடன் தங்களது அனுபவங்களையும் வாழ்க்கைப் பயணத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
மேலும், எழுத்தாளர் சேத்தன் பகத், நடிகரும் ஊக்கமளிக்கும் பேச்சாளருமான ஆஷிஷ் வித்யார்த்தி,தொழிலதிபர் அமன் குப்தா, வரலாற்றாசிரியர் மனு எஸ்.பிள்ளை, விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா,திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.
மாணவர்களின் புதுமையான சிந்தனை, முயற்சி மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் Studentpreneur Awards 2026 விருதுகளும், மாணவர்களின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் Inspirational Guru Awards 2026 விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மணிமேகலை மோகன் கூறுகையில்,
“கல்வி என்பது மாணவர்களை தேர்வுகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் மட்டுமே தயார்படுத்துவதாக இருக்கக்கூடாது. தோல்விகளை எதிர்கொள்ளும் மன உறுதி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறும் தன்னம்பிக்கை, மனதையும் உடலையும் கவனித்துக்கொள்ளும் விழிப்புணர்வு ஆகியவற்றுடன் அவர்களை வாழ்க்கைக்குத் தயார்படுத்த வேண்டும்” என்றார்.
எதிர்கால உலகின் மாற்றங்களை புரிந்துகொண்டு, அவற்றுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ளும் திறனையும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிந்தனையையும் மாணவர்களிடம் உருவாக்கும் முக்கியமான தளமாக இம்மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.