March 17, 2020
கொரோனோ அச்சம் காரணமாக விமானம் மூலம் கோவை வருபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க, 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் விமானம் மூலம் கோவை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க, கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்து இருந்தார்.
இதன்படி கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தேஜா சக்தி மகளிர் பொறியியல் கல்லூரி விடுதி கண்காணிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. 100 படுக்கை வசதிகளுடன் கூடிய இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. விமானம் மூலம் வரும் பயணிகள் 15 நாட்கள் தங்க வைத்து கண்காணிக்கப்படுவார்கள் எனவும், கொரோனோ அறிகுறி தென்பட்டால் இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.