January 31, 2020
கோவையில் விபத்து வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி 75 இலட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்காத தனியார் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மகள் கீதாஞ்சலி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2018 ம் ஆண்டு மே மாதம் காந்திபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கீதாஞ்சலி மீது, எஸ் 16 என்ற தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதிலா கீதாஞ்சலியின் இடது கை சேதமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து இழப்பீடு கேட்டு, ஜனார்த்தனன் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் வட்டியுடன் 75 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இழப்பீடு வழங்காததால் ஜனார்த்தனன், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதில் இழப்பீடு வழங்ககாததால் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் கோவை ரயில் நிலையம் பகுதிக்கு வந்த போது, அப்பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.