February 4, 2019
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலங்களில் வனவிலங்குகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறி சிறுத்தை,புலி,கரடி வனவிலங்கு வேடமணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு.பழனிசாமி கூறுகையில்,
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வரும் விளை நிலங்களில் யானைகள், மயில் ,பன்றி, செந்நாய், குரங்கு சிறுத்தை போன்றவைகளால் விவசாய பயிர்கள் பாதிப்பு ஏற்படுவதாகவும் தோட்டங்களில் வளர்க்கபடும் ஆடு,மாடு,கோழி போன்றவற்றை கொன்று விடுவதாக புகார் தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும் அதனை பிடிக்க வனத்துறை 15 நாட்களுக்கு முன்பு கூண்டு வைக்கபட்டு இதுவரை அது பிடிபடவில்லை என தெரிவித்தவர் வனத்துறையினர் மெத்தனமாக செயல்படுகிறது.
விவசாயிகள் அச்சத்துடனேயே அங்கு விவசாயம் செய்து வருவதாக கூறியவர் சிறுத்தை நடமாட்டத்தை வன நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் அது விளை நிலங்களில் வருவதை தடுக்க சிறப்பு படை நியமனம் செய்து விளை நிலங்களில் வனவிலங்குகள் வருவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு வனவிலங்கு வேடமணிந்து வந்து மனு அளிக்க வந்தவர்களை அங்கிருந்தவர்கள் ஆச்சிரியமாக பார்த்தனர்.