September 10, 2026
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயதான ராமர் என்பவர் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
ராமர் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் துடியலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்.இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் 8-ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது மனைவி திருமதி. சாந்தி மற்றும் மகள் செல்வி. அனுதர்ஷினி ஆகியோர், ராமரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன், அவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. கே.எம்.சி.ஹெச். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், தகுந்த நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு உறுப்புகளை நோயாளிகளுக்கு பொருத்தினர்.
இதுகுறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில்,
“மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால், அது பல உயிர்களைக் காப்பாற்ற உதவும். ராமரின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.