February 13, 2020
கோவையில் போக்சோ கைதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது தப்பியோடியுள்ளார்.
தாராபுரம் குண்டடம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் . இவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையில் சுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பலத்த பாதுகாப்புக்கிடையே சிகிச்சையில் இருந்த கைதி சுப்பிரமணியம் பாத்ரூம் ஜன்னலை வளைத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர ஆயுதப்படை காவலர்கள் பந்தய சாலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பந்தய சாலை காவல் துறையினர்
அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராக்களில் தப்பியோடிய சுப்பிரமணியம் குறித்து தகவல்களை சேகரித்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள சிறைவாசிகளின் சிகிச்சை அறை போதிய பாதுகாப்பு இல்லாமல் , பழைய கட்டிடமாக இருப்பதாக , காவல் துறை அதிகாரிகள் , பல முறை மருத்துவமனை நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளனர். அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனையின் முதல்வர் புதிய கட்டிடம் கட்டுவதற்கு எந்த வித நடவடிக்கையும், எடுக்காததே கைதி தப்பியோடிதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.