February 7, 2020
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முல்லைக்கொடி. இருவருக்கும் திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகி உள்ளது. மகள் நந்தினி (14) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். முத்துகுமார் , முல்லைக்கொடி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக முல்லைக்கொடி மகள் நந்தினியுடன் காமராஜ்நகர் பகுதியில் கவுரி என்பவர் நடத்தி வரும் ஆதரவு இல்லத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு செல்லாமல் ஆதரவு இல்லத்தில் இருந்த நந்தினி திடீரென உள் அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.