January 20, 2020
கோவையில் நடுரோட்டில் டெம்போ டிராவலர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அவினாசி சாலையில் பீளமேடு அருகே இன்று மாலை டெம்போ டிராவலர் சென்று கொண்டிருந்தது. வாகனம் பீளமேட்டை அடுத்த பன்மால் அருகே சென்று கொண்டிருந்த போது வாகனத்தின் முன்புறம் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகனத்தின் ஓட்டுநர், சாலையோரம் நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கினார். சில நிமிடங்களில் வாகனம் முழுவதும் தீ பரவத்தொடங்கியது.
இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், வண்டி முழுவதுமாக எரிந்து சாம்பலானது. கோவையில் நடு ரோட்டில் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.