November 13, 2020
தண்டோரா குழு
கோவை பூலுவபட்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில், பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் என்பவர் 18 குவாட்டர் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு செல்லும்போது இரவு ரோந்து பணிக்கு வந்த காவலர்கள் தடுத்த நிறுத்தியபோது நிற்காமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவரை துரத்திச் சென்றனர்.
அப்போது ரங்கராஜ் அங்கிருந்த ஒரு தோட்டத்தின் அருகில் உள்ள சாலையில் மது பாட்டில்களை வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னால் சென்ற காவலர்கள் மேற்படி தோட்டத்தை சோதனை செய்தபோது அங்கு 18 குவார்ட்டர் மது பாட்டில்கள், அதோடு சிங்கிள் பேரல் நாட்டு கைத்துப்பாக்கி ஒன்று இருந்ததைக் கண்டு அதை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது,தோட்டத்து சாலையில் கைப்பற்றப்பட்ட சிங்கிள் பேரல் துப்பாக்கி கோவை காண்டம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரது என தெரியவந்தது. இவர் தோட்டத்து உரிமையாளரின் உறவினர் என்பதும் இவர் இந்திய ராணுவத்தில் டெல்லியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்ததாகவும், கடந்த ஒருவருடம் முன்பு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு தற்போது வேலைக்குச் செல்லாமல் இங்கு தங்கியிருப்பதாகவும் தகவல் உள்ளது.