January 22, 2019
தண்டோரா குழு
கோவையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 60 சதவிகிதம் பேர் கலந்துகொண்டனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெற்ற போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும், ஊரக வளர்ச்சிதுறை, வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 80 சதவிதத்திற்கும் மேலான அரசு ஊழியர்களும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்களின் போராட்டம் ஒரு புறம் இருந்தாலும் பெரும்பாலான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலை நிறுத்தம் காரணமாக அரசு பணிகள் முடக்கப்படதோடு, மாணவர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் போராட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.