January 30, 2020
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு எல்.எஸ்.டி எனும் போதை மருந்து மற்றும் கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த காரினை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எல்.எஸ்.டி எனும் போதைப்பொருள் தடவிய 5 அட்டை வில்லைகள் மற்றும் ஒன்றரை கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னையில் இருந்து போதைப்பொருள்களை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த ராஜேஸ் மற்றும் திருவள்ளுரை சேர்ந்த பிராங்கிளின் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.