December 10, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தொடர்பாக மக்களிடம் விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இதற்காக, அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறையின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே விரல் ரேகை பதிவு செய்யும் பணியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக இத்திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பரிசோதனை முறையில் பயோ மெட்ரிக் இயந்திரம் மூலம் விரல் ரேகை பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தீவிரமடைந்துள்ளன. விரைவில் அனைத்து கடைகளிலும் பயோ மெட்ரிக் இயந்திரம் மூலம் கைரேகை பெறப்படும்,” என்றார்.