January 14, 2019
தண்டோரா குழு
கோவையில் உரிமையாளர் திட்டியதன் காரணமாக வீட்டின் அருகே உள்ள அம்மன் சிலையின் மேல் அமர்ந்த கிளி பல மணி நேரமாக அதே இடத்தில் அமர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் கிளியை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கோவையை அடுத்த பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில், உள்ள முருகேஷ் என்பவர் ஸ்ரீ என அழைக்கப்படும் கிளி ஒன்றை வளர்த்தி வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் வெளியே முருகேஷின் மகன் விளையாடிக் கொண்டு இருக்கும் போது, திடீரென பறந்து சென்றதால் கிளியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிளியை தேடும் போது, அந்த கிளி அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோயிலின் அம்மன் சிலையின் தோள்பட்டையில் அமர்ந்து இருந்தது தெரியவந்தது.
நேற்று மாலை வந்த கிளி தற்போது வரை ஒரே இடத்தில் அவ்வாறே அமர்ந்து உள்ளது. அதன் உரிமையாளர் கிளியை அழைத்தாலும் அது வராமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் இந்த கிளியை பார்த்து செல்கின்றனர். மேலும் அம்மன் சிலை மீது அமர்ந்து இருந்ததால், இன்று அம்மனுக்கு மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்து இருந்ததாக அர்ச்சகர் தெரிவித்தார். ஒரே இடத்தில் அம்மன் சிலை மீது அமர்ந்து இருக்கும் கிளியை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.