• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இரு மதத்தினர் அறிவித்துள்ள பந்த்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைப்பு

March 7, 2020

கோவையில் இரு மதத்தினர் அறிவித்துள்ள பந்த்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க 2 கூடுதல் டிஜிபிகள் தலைமையில் 1500 காவலர்கள் மற்றும் சி ஆர் பி எப், ஆர் ஏ எப் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்து முன்னணியின் கோவை மாவட்ட செயலாளர் ஆனந்த் மூன்று தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் கோவையில் தாக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் , குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் கோவையில் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

இதேபோல, கோவை கணபதி வேதம் பால் நகரிலுள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் முகமது கனி தாக்கப்பட்டதை கண்டித்து, அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய அமைப்பு சார்பில் கோவையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

இரு மதத்தினரும் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளபடியால் உக்கடம் மீன் மார்க்கெட், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், டவுன்ஹால், குனியமுத்தூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து வழக்கம் போல் இயங்கினாலும் , மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பந்த்தையொட்டி கடையை அடைக்கச் சொல்லி யாராவது வற்புறுத்தினால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் நேற்று உத்திரவிட்டிருந்தார். மாநகரின் மையப்பகுதியில் ஆர் ஏ எப் , மற்றும் சி ஆர் பி எப் , வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பதட்டமான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவை மாநகர கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் . முக்கிய வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டிஜிபிக்கள் ஜெய்ஹிந்த்முரளி, சங்கர் ஜிவால், ஆகியோர் இரண்டு நாட்களாக கோவையில் முகாமிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகரம் அமைதியாக இருக்க, பந்த்தை தடை செய்ய வலியுறுத்தி கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு பதொவு செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் பந்த்தில் கடையை மூடச்சொல்லி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும், மக்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கும் என உத்திரவாதம் அளித்திருந்தது.

மேலும் படிக்க