January 12, 2019
தண்டோரா குழு
கொடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஏற்பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில்,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி,
நேற்றைய தினம் தெஹல்கா பத்திரிக்கை முன்னாள் ஆசிரியர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கொடநாடு சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளார்கள்.கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ ஆவணம் குறித்து புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கொடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை.
ஜெயலலிதா எந்த ஒரு நிர்வாகியிடமும் எந்த ஒரு ஆவணத்தையும் எப்போதும் பெற்றதில்லை.ஜெயலலிதா மீது களங்கம் கற்பிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
தவறான செய்தி வெளியிட்டவர்கள், வீடியோ விவாகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது விரைவில் கண்டறியப்படும்.கொடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் குறுக்கு வழியை கையாள்கிறார்கள். வீடியோ வெளியீட்டில் அரசியல் பின்புலம் உள்ளது.குறுக்கு வழியை கையாண்டு அதிமுக அரசை எந்த காலத்திலும் கவிழ்க்க முடியாது.
தமிழகத்தில் எந்த திட்டமும் கொண்டு வரக்கூடாது என்பது திமுகவின் நோக்கமாக உள்ளது. ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்குக்கான அடிப்படை வசதிகளை செய்ய தவறியவர் மு.க ஸ்டாலின். மக்களின் அடிப்படை வசதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .திமுகவைப் பொறுத்தவரை என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.பொங்கல் பரிசு, முதலீட்டாளர் மாநாட்டுக்கு எதிராகவும் திமுகவினர் வழக்கு தொடர்ந்தனர்.
உள்ளாட்சி தேர்தல் தடைபடுவதற்கு அதிமுக காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது தவறான தகவல்.உள்ளாட்சித் தேர்தல் தடைபடுவதற்கு திமுகவே காரணம்.
திமுகவின் கிராம சபை கூட்டம் ஒரு அரசியல் நாடகம் என கூறினார்.