January 28, 2019
தண்டோரா குழு
குடிபோதையில் இருந்த டிரைவர் ஓட்டிய தனியார் பள்ளி பேருந்து பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெல்டூரி மண்டலம் மந்தாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை தனியார் பள்ளி பேருந்து ஒன்று இன்று காலை வழக்கம் போல் மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது மாந்தாடி என்ற பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறி பாலத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 50 மாணவ மாணவிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காயமடைந்த 50 மாணவ-மாணவிகளில் 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று உயிருக்கு போராடி வருகின்றனர். மருத்துவமனையில் இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவர்கள் இல்லாமல் துப்புரவு தொழிலாளர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்
விபத்து குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகாத நிலையில் பள்ளி பேருந்து ஓட்டுநர் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியதாகத் தகவல்கள் கூறுகின்றன.