February 7, 2019 தண்டோரா குழு
காட்டு யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான பிரச்னையை சமாளிக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக பீட்டா இந்தியா அமைப்பு தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு அனுபியுள்ள கடிதத்தில், காட்டு யானைகளின் வழித்தடங்கள் அளிக்கப்படுவதால் அவை ஊருக்குள் வருவதும் அச்சுறுத்துபவர்களை தாக்குவதும் தற்போது வழக்கமாகிவிட்டது. யானைகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாய நிலங்களை சுற்றி மிளகாய் சாகுபடி செய்ய வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுவதால் காட்டு யானைகள்
விளைநிலங்களுக்குள் நுழைவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமங்களுடன் இணைந்து தமிழக அரசு மிளகாயை பயிரிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சின்னத்தம்பி உள்ளிட்ட காட்டு யானைகளின் இயற்கை வாழ்விடம் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் வனத்துறையால் பிடிக்கப்படும் யானைகள் மண் அள்ளும் இயந்திரங்களால் தூக்கும் போது அவற்றுக்கு காயம் ஏற்பட்டு தந்தங்கள் உடையும் அபாயம் உள்ளதால் யானைகளை பிடிக்கும்போது மனிதாபிமான வழிமுறைகளை கையாள வேண்டும். வன விலங்குகள் பாதுகாப்பு முயற்சி பற்றி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பீட்டா இந்தியா அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளது.