January 17, 2019
தண்டோரா குழு
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. போட்டியில் 1400 காளைகளும், 848 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள்
ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும்,நேற்று மதுரை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது. போட்டியில் 1400 காளைகள் மற்றும் 848 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் சுழற்சி முறையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் கார்,கட்டில் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும்,இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.