February 1, 2019
தண்டோரா குழு
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்தியாவே உற்று நோக்கும் கலைஞனை அவமதித்துவிட்டீர்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் 75 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் கவுரவிக்கும் விதமாகவும் ’இளையராஜா-75’ விழாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடக்கி வைக்கவுள்ளார். மேலும் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கிடையில், இந்த நிகழ்ச்சி தொடர்பாக தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும், இளையராஜாவுக்கு பாராட்டு விழா என்று கூறி விட்டு, நிதி திரட்ட தயாரிப்பாளர் சங்கம் முயற்சிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோரால் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்நிகழ்ச்சிக்காக செலவிடப்படும் கணக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் உத்திரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இளையராஜா-75 இசை நிகழ்ச்சியை தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்த தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய ஆதாரம் இல்லாமல் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம் இசை நிகழ்ச்சியின் கணக்கு விவரங்களை மார்ச் மாதம் 3ம் தேதி தாக்கல் செய்யுமாறு பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன்,
இந்தியாவே உற்று நோக்கும் மிகப்பெரிய கலைஞனுக்கு நடத்தும் பாராட்டு விழாவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்ததன் மூலம் அவரை அவமதித்து விட்டதாக தெரிவித்தார். மேலும், கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, வரவு செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க மறுப்பு தெரிவித்தார்.