March 15, 2018 தண்டோரா குழு
தமிழகத்திற்கு தான் மத்திய அரசின் நிதி மிக குறைவாக கிடைக்கிறது என நிதித்துறை செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
தமிழக அரசின் 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சரமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், தமிழக அரசின் கடன் ரூ. 3.55 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிவித்தார். கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.3.14 லட்சம் கோடியாக இருந்தது. ரூ1,43,962 கோடி கடன் பெற தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. 2018-19ல் அரசின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடன் சுமை உயர்வது குறித்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நிதித்துறை செயலர் சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழக அரசின் கடன் சுமை 3.55 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 44,480 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.வருவாய் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜிடிபியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் கடன் பெறுவதால் கடன் சுமை உயர்கிறது. நிதிச்சுமையும், கடன் பற்றாக்குறையும் கட்டுக்குள் உள்ளது என்றார்.
மேலும், இந்தியாவில் தமிழகத்திற்கு மத்திய வரி வருவாய் குறைவாக கிடைக்கிறது. சிறப்பு மானிய நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரியால், தமிழகத்திற்கு வரி வருவாய் குறைந்துள்ளது. இழப்பை மத்திய அரசு ஒரளவு ஈடு செய்துள்ளது. தொழில்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் தெரிகிறது. ஜிஎஸ்டிக்கு பின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் உயர்ந்துள்ளது. முக்கியமான 10 பிரச்னைகளை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக கூறினார்.