February 20, 2020
அவினாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 20 பேர் பலியான கோர விபத்து நடந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள அரசுக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று 49 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து ஆலப்புழக்கு நேற்றிரவு புறப்பட்டு சேலம் – கோவை சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.இன்று அதிகாலை அவிநாசி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த டைல்ஸ் ஏற்றிய கன்டெய்னர் லாரி ஒன்று அதிவேகத்தில் மோதியது. இதில் பேருந்து சின்னாபின்னமாகி, பயணிகள் இடிபாடுகளில் சிக்கி பரிதவித்தனர். இந்தக் கோர விபத்தில் சிக்கிய பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த வழியாகச் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி பேருந்து விபத்தில் சிக்கியவர்களையும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்தப் பயங்கர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் தற்போது வரை நான்கு பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
அவினாசி கோர விபத்துஇதுகுறித்து காவல் துறையினர் விசாரித்ததில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் சாலையில் இருந்த தடுப்பைக் கவனிக்காமல் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதென தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரியிலிருந்த ஓட்டுநர் உள்ளிட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். நிகழ்விடத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், விபத்து குறித்து கேட்டறிந்தார்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.