March 5, 2020
சென்னையில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
கடந்த 2017ம் ஆண்டில் தமது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினி, புதிய கட்சி தொடங்கி, 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
எனினும், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகாலம் மட்டுமே உள்ள நிலையில், கட்சி தொடங்கும் பணிகளில் ரஜினி மும்முரம் காட்டி வருவதாகவும், கட்சி தொடங்கி ஆகஸ்ட் மாதம் முதல் மாநாட்டை நடத்துவார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்தக் கூட்டத்தில் எப்போது கட்சி தொடங்குவது, கட்சியின் பெயர், கொடி போன்றவற்றை முடிவு செய்வது, கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா? அல்லது தனித்து களமிறங்கலாமா? என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகவும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.