• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“அன்பின் அடையாளம் போதும், காலில் விழ வேண்டாம்” – ஸ்டாலின்

January 7, 2017 தண்டோரா குழு

“தொண்டர்கள் யாரும் என் காலில் விழ வேண்டாம்” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக தலைவர் கருணாநிதியின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! உங்களில் ஒருவன் எழுதும் அன்பு மடல். கட்சித் தலைவரின் வாழ்த்துகளுடன் பொதுச் செயலாளர் அன்பழகனின் முன்னிலையில் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் உங்களின் பேராதரவுடனும் நல்லெண்ணத்துடனும் கழகத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன்.

நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. காரியமாற்ற விரைந்து வா என அவை ஒவ்வொரு நிமிடமும் அழைக்கின்றன. எனினும், உங்களைப் போன்றவர்களின் உள்ளன்பும், அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பல கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், ஊடகத்தினர் எனப் பலரின் நேசமும் பேரன்பும் நேரிலும் அலைபேசியிலும் வாழ்த்து மழைகளாகப் பொழிகின்றன. பணிச் சுமைகளுக்கிடையில் உங்களின் அன்புமழையில் நனைவது மனத்துக்கு இதமளித்து, சுமையைச் சுகமாக்குகிறது.

நேரில் சந்திக்க வரும் கழகத்தினர் சிலர் ஆர்வம் மிகுதியால், நான் சற்றும் எதிர்பாராத நிலையில் என் காலில் விழுந்து வணங்க முயல்வது எனக்கு மனத்தளவில் பெரும் நெருக்கடியை உண்டாக்குகிறது.

தி.மு.க.கட்சியினர் இப்படிக் காலில் விழுவதை நான் சிறிதும் விரும்புவதில்லை. விழ முயலும் தோழர்களை உடனடியாகத் தடுத்து தூக்குவதுடன், சில வேளைகளில் பாசத்தோடு கடிந்து கொள்வதும் உண்டு.

எனினும், நாள்தோறும் நேரில் வாழ்த்து தெரிவிக்கும் கழகத்தினரில் சிலர், என் காலில் விழ முயல்வதும் அதனைப் பார்க்கும் மற்றவர்களும் அதே முறையைக் கடைப்பிடிக்க நினைப்பதும் எனக்குச் சற்றும் உடன்பாடில்லாத செயல். அத்துடன், சுயமரியாதைக் கொள்கை வழியில் தன்மானம் காக்கும் இந்த இயக்கத்திற்கு இது எதிர்மறைச் செயலாகவும், உடன்பாடில்லாத செயலாகவும் அமைந்து விடுகிறது.

வளைந்து குனிந்து தவழ்ந்து தரையில் உருண்டு கால்நோக்கி கும்பிடு போடுபவர்களால் தமிழகம் பாழ்பட்டுக் கிடக்கிறது. நமக்கு அந்தப் பள்ளமான பாதை வேண்டாம். நாம் தலை நிமிர்வோம். தமிழகத்தை நிமிர்த்துவோம்!

இவ்வாறு மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க