February 19, 2019 தண்டோரா குழு
அதிமுக – பாஜக கூட்டணியை ஜெயலலிதா ஆத்மா மகிழ்ச்சி கொள்ளும் என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி இன்று அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். 21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், அதிமுக – பா.ஜ., இடையே முதல் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த 14ம் தேதி சென்னையில் நடந்தது. இதனைத்தொடர்ந்து அதிமுக – பாஜக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இன்று சென்னை தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி , பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் , வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இரண்டு மணி பேச்சு வார்த்தைக்கு பின் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு என முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில்,
“நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கவே அதிமுகவும், பாஜகவும், பாமகவும் மெகா கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக தலைமையில் கூட்டணியாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம். இந்த கூட்டணி குறித்து ஜெயலலிதா மகிழ்ச்சி அடைவார், அவர் கனவை நிறைவேற்ற உழைப்போம். நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தலை சந்திப்போம். கடந்த 2016ல் ஜூலையில் ஜெயலலிதாவை சந்தித்து எரிசக்தி தொடர்பாக பேச்சு நடத்தினேன். இது என்றும் எனது நினைவில் உள்ளது. தற்போது நாங்கள் ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டணியை ஜெயலலிதா ஆத்மா மகிழ்ச்சி கொள்ளும். இந்த கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.