December 18, 2020
தண்டோரா குழு
அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ் நேற்று தனியார் தொலைக்காட்சியில் பேசும் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் காணவில்லை என்று கூறியிருந்தார்.இது தேமுதிகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.இவ்வாறு பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜை கண்டித்து இன்று கோவை காந்தி பார்க் பகுதியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் செல்வராஜன் புகைப்படங்களை கால்களால் மிதித்தும் செருப்பால் அடித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக கோவை மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில்,
தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த நபருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி பேச அருகதை இல்லை என்றும் தொலைக்காட்சி தரும் ஆயிரம் இரண்டாயிரத்திற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி விமர்சிப்பதற்கு செல்வராஜிற்கு தகுதி இல்லை என்றும் இதுபோன்று பேசுவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.சிறுவாணி நீரை திருடி பிழைத்த செல்வராஜ் மாலைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.