July 5, 2025
தண்டோரா குழு
கோவையில் தமிழக தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன்
இந்தியா வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் மற்றும் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
இந்தியாவில் எல்லா துறைகளிலும் முன்னேறி வரும் மாநிலமாக தமிழ்நாடு மாநிலம் இருப்பதில்,தொழில் துறை சார்ந்தவர்கள் என்ற முறையில் மிகுந்த பெருமை கொள்கின்றோம்.ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு பொருளாதாரம் உயர்வதற்காக அரசு எடுத்து வரும் முயற்சிகளை நாங்கள் மனமாரப் பாராட்டுகின்றோம்.தமிழக முதல்வரின் தலைமையின் கீழ் தமிழ்நாடு குறிப்பாக தொழில்துறை தொடர்ந்து வியக்கத்தக்க வளர்ச்சி பெறும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.(தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வில் இருந்து எல்லா பிரிவுகளுக்கு விலக்கு அளித்துள்ளது). என்றாலும்,குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் மற்றும் சில தொழில்களும் அதன் கீழ் வரவில்லை. எனவே நாங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் மின் கட்டண உயர்வை விலக்கிக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பொறுத்த வரை, இந்த மின் கட்டண உயர்வு என்பது ஒரு எதிர்பாராத கூடுதல் சுமையோடு
கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் அத்துறையில் கூடுதல் நிதிச்சுமை, உற்பத்தி குறைவு, பெரும் அளவில் வேலை இழப்பு, சில நேரங்களில் தொழிற்சாலை மூடப்படும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே அரசு எங்களது வேண்டுகோள்களை பரிசீலிக்குமாறும், தங்களின் ஆதரவை தொழிற்துறைக்கு தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.