April 28, 2020
தண்டோரா குழு
கோவையில் மூன்றாவது நாளாக முழு ஊரடங்கு தடையை மீறுபவர்கள் எண்ணிக்கை குறைந்தது.
கோவை மாநகராட்சியில் இன்று மூன்றாவது நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மாநகராட்சி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநகர் முழுவதும் 22 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து மாநகருக்குள் இணையும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனால் கோவையில் வெளியே வருபவர்களின் எண்ணிக்கை மற்ற நாட்களை ஒப்பிடுகையில் வெகுவாக குறைந்தது.இதற்கு முன்பு ஊரடங்கின் போது போது தினமும் 600 முதல் 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கோவை மாநகராட்சி பகுதியில் தடையை மீறி சென்ற 5 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன
அதேசமயம் கோவை புறநகர் மாவட்டத்தில் தடையை மீறியதாக 426 பேர் கைது செய்துள்ளனர் 357 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவையில் பல்வேறு இடங்களில் உள்ளூர் போலீசாருக்கு உதவியாக ஈரோடு மாவட்டத்திலுள்ள அதிரடிப்படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் ஆம்புலன்ஸ் ,அரசு வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனம் தவிர வேறு எதுவும் சாலைகளில் காணமுடியவில்லை ஆங்காங்கே சில இடங்களில் மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன.