April 16, 2020
தண்டோரா குழு
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இன்னவேஷன் செல்லில் புதியவடிவ முகக்கவசம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
தமிழக அரசு கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்றுநோய் தடுப்பு நடடிக்கைகளை எடுத்துவருகிறது.பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை மிக முக்கியமாக வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் மற்றும் கவுகாத்தி ஐ.ஐ.டி. மாணவர் அரேனியஸ் கருணாகரன் ஆகியோர் இணைந்து
புதியவடிவ முகக்கவசம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
கொரோனா தடுப்புப் பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள சுகாதாரத் தொழிலாளர்கள்,செவிலியர்கள்,நிர்வாக அலுவலர்கள்,நகராட்சி ஊழியர்கள்,காவல்துறை ஊழியர்கள் என அனைவருக்கும் இது பயன்படும்.ஏன் அறுவை சிகிச்சையின் போதுகூட இதைப் பயன்படுத்தலாம்எனப் பரிந்துரைக்கின்றனர். ஏ 4 அளவு ஒ.எச்.பி. தாள், மக்கள் பொதுவாகப் பயன்படுத்தும் டிரான்ஸ்பரண்ட் கண்ணாடி, இரண்டு பட்டன்கள் என இம்மூன்று பொருட்கள் மட்டுமே இருந்தால் இதனை மிக எளிதாகத் தயார் செய்துவிடலாம். இதைத் தயாரிக்க முப்பத்தைந்து ரூபாய் மட்டுமே செலவாகும். மிகக் குறைந்த செலவில் மிகஅதிகமான அளவில் இதை உற்பத்தி செய்யமுடியும்.
இம்முகக்கவசம் நெற்றியில் இருந்து அணிந்தவரின் கீழ் தாடை மற்றும் காது வரை பாதுகாப்பை வழங்குகிறது. அணிந்தவரின் கழுத்து அசைவுகளுக்கு இது தடையாக இருக்காது.தற்போது ராமகிருஷ்ணா கல்லூரி இன்னவேஷன் செல்லில் ஒருநாளில் 100 முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் இதனை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமணை ஊழியர்கள் பயன்பாட்டிற்கு இதனை இலவசமாக வழங்கியுள்ளனர். ராமகிருஷ்ணா மருத்துவமணை முதன்மையர் மற்றும் இயக்குனர் பி.சுகுமாரன் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சி.வி.ராம்குமார் ஆகியோர்களிடம் பிரசன்ன குமார், அரேனியஸ் கருணாகரன் ஆகியோர் இதனை வழங்கினர். இனிவரும் நாட்களில் இதன் தயாரிப்பை மேலும் அதிகப்படுத்தி அனைவருக்கும் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளனர். சரியான நேரத்தில் சமூக அக்கறையுடன் இவர்கள் எடுத்துள்ள இம்முயற்சி பொதுமக்களின் பெரும்பாராட்டைப் பெற்றுள்ளது.