March 17, 2020
தண்டோரா குழு
கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க ரயில்வே பயணிகளுக்கு முக கவசம் வழங்க வேண்டும் என எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா வலியுறுத்தியுள்ளார்.
கோவை வின்சென்ட் சாலையில் எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
மத்திய அரசு இலாபத்தில் இயங்கும் பல்வேறு துறைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது என தெரிவித்தார். இலாபத்தில் உள்ள எல்ஐசியை தனியாருக்கு விற்பனை செய்வது நியாயம் அல்ல எனவும், தனியாரிடம் வழங்கப்பட்ட ரயில்களில் மக்களுக்கு பெரியளவில் வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
ரயில்வே தனியார் மயம் ஆவதால், இனி இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை கிடைப்பது அரிதாகும் எனவும், ரயில் வண்டிகளை விமானம் போல பார்க்க வேண்டிய நிலை வரும் எனவும் அவர் தெரிவித்தார். தனியார் ரயில்களில் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது எனவும், ரயில்வே தனியார் மயத்தை எதிர்த்து தேவைப்பட்டால் மத்திய அரசிற்கு அழுத்தம் தரும் போராட்டங்களை நடத்துவோம் எனவும் அவர் கூறினார். கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க நன்றாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும், ரயில்வே பயணிகளுக்கு முக கவசம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.