March 6, 2020
உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதியளித்தபடி கோவையில் நாளை கடையடைப்பு நடத்த அனுமதிக்க கூடாது என கோவை மக்கள் மேடை அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் கோவை மக்கள் மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
இந்து அமைப்பினர் சிறு சம்பவத்தை காட்டி கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுபோன்ற கடையடைப்பு போராட்டத்தினால் பொதுமக்கள் உடமை, உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் கோவை மக்கள் மேடை சார்பில் முறையீடு செய்தோம். கடையடைப்பு நடத்த அனுமதிக்கமாட்டோம் என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
நீதிமன்றத்தில் உறுதியளித்த படி கடையடைப்பு நடத்த அனுமதிக்க கூடாது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும். மாநகர காவல் துறை, மாவட்ட நிர்வாகம் நாளை கோவை இயல்பு நிலையில் இருக்க நடவடிக்கை வேண்டும் எனவும் கூறிய அவர், தவறினால் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என தெரிவித்தார்.
இதையடுத்து பேட்டியளித்த தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்,
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டதை கண்டித்து, அவ்வமைப்பு சார்பில் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அன்னூர் பகுதியில் தையல் கடை நடத்தி வந்த தபெதிக நிர்வாகி ஆனந்த கிருஷ்ணன் மீது இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதோடு, தையல் கடையை அடித்து உடைத்துள்ளனர். இந்து முன்னணி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடை அவ்வமைப்பிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.