January 18, 2020 தண்டோரா குழு
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது கே.எஸ்.அழகிரியுடன் கே.வி.தங்கபாலு, விஷ்ணுபிரசாத் எம்.பி., காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி,
திமுக காங்கிரஸ் கூட்டணியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.திமுகவுடனான கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். சட்டமன்றத் தேர்தலிலும் அதன்பிறகும் எங்கள் கூட்டணி தொடரும் திமுக கூட்டணியை அதிமுக கூட்டணியுடன் ஒப்பிட முடியாது. தனித்து நிற்க இந்தியாவில் எந்த கட்சிக்கும் செல்வாக்கு இல்லை, துக்ளக்குடன் முரசொலியை ரஜினி ஒப்பிட்டு பேசியது தவறு. முரசொலி குறித்து ரஜினி உள்நோக்கத்துடன் கூறியிருக்கமாட்டார் ரஜினி வாய்தவறி கூறியிருக்கலாம். காங்கிரஸ் தலைமை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது.
காங்கிரஸ்- திமுக ஆகிய இரு கட்சிகளிடையே பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருந்ததாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி கமல்ஹாசன் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். மதசார்பற்றவராக காட்டிக் கொள்ளும் கமல் பாஜக ஆதரவாளர் ரஜினியின் உதவியை நாடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். குடியுரிமை சட்டம் குறித்து கருத்து கூறமுடியாத அதிமுக எங்கள் கூட்டணி குறித்து கருத்து சொல்வது தவறு என்று தெரிவித்துள்ளார்.