February 14, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை உயர் அதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கட்டாயம் குறிப்பாக பெண்கள் பணியாற்றும் அலுவலகங்களில் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜிக்கு எதிரான பெண் எஸ்.பியின் பாலியல் புகார் குறித்த வழக்கில் அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும், முக்கியமாக பெண் ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தலைமை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி முருகன் மீது பெண் எஸ்.பி புகார் அளித்தன் பேரில், சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஜி. முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி கமிட்டி விசாரணையை தொடரலாம் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறினார்.
மேலும், “தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், முக்கியமாக பெண் ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்” என்று தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது அறையிலும் இரு வாரத்தில் சிசிடிவி கேமரா பொருத்துமாறு பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.