February 12, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் பேசிய அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.
டிக்-டாக் என்ற செயலியின் மோகம் தற்கால இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த செயலியில் இளைஞர்கள், தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் வசனங்களுக்கு ஏற்றவாறு நடித்து, அந்த வீடியோக்களை வெளயீட்டுக் கொண்டு வருகின்றனர். இதிலும் சிலர் ஆபாசமான வீடியோக்களையும், சட்டவிதிகளுக்கு புறம்பாகவும் வீடியோக்களை வெளியிடுகின்றனர். இந்த செயலியினால் பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.தமீமுன் அன்சாரி, பல்வேறு ஆபாச செயலுக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் வழிவகுப்பதால் #TikTok செயலியை தமிழகத்தில் தடை செய்ய அரசு ஆராய வேண்டும். மேலும், கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மணிகண்டன், டிக்டோக் செயலி மூலமாக கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என பொதுமக்கள், அரசியல் தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புளுவேல் கேமை போன்று டிக் டாக்கையும் தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.