January 30, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் நடந்த சாலை விபத்துகளில் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, வாகன தணிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 29ஆம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று வட மாநில இளைஞர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதேபோல், காரமடை பகுதியில் நடந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்தியவரும் இருசக்கர வாகனத்தில் வந்த 22வயது இளைஞர் ஆவர்.
கடந்த இரு நாட்களில் மாவட்ட பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் 11 பேர் உயிரிழந்திருப்பதுடன், 6 பேர் படுமாயடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் 23 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் ஆவர். மாவட்ட பகுதியில் பெரும்பாலான இடங்களிலும், கிராமங்களை ஒட்டிய பகுதிகளிலும் வாகன ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணியாமலும், சாலை விதிகளை மீறுவதாலும் விபத்துகள் நடைபெறுவதற்கு காரணம் என்பது விபத்துகளை பார்க்கும்போது தெரிகிறது. நகர் பகுதிகளில் உள்ளதுபோல், மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் கண்காணிப்பு, வாகன தணிக்கை குறைவாக உள்ளதே விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களில் விபத்துகளில் உயிரிழப்பு அதிகமானதுடன், மாவட்ட காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2ஆயிரத்து 041 சாலை விபத்துகள் ஏற்பட்டதில், 531 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.